You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நேரலை, பிரதமர் மோதி மற்றும் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த விஜய்

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

முக்கிய சாராம்சம்

  • தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, தவெக108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
  • தமிழக வெற்றிக் கழகத்துக்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.
  • திரைத்துறையினர் பலரும் தவெகவுக்கும் அதன் தலைவர் விஜய்க்கும் எக்ஸ் பக்கத்தில் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
  • மக்கள் தங்கள் கடமையை செய்யத் தவறிவிட்டதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
  • 'தவெக முன்னிலை பெற்றுள்ளது மாற்றத்தைக் குறிக்கிறது' என பிபிசி தமிழிடம் கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
  • தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் எந்தெந்த கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவியது என்பதை அறிய...

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி தெரிவிக்க கொளத்தூர் சென்ற ஸ்டாலின் - உடன் இருந்த சேகர் பாபு கண்ணீர்

    தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூற சென்னை கொளத்தூர் தொகுதிக்கு மு.க. ஸ்டாலின் சென்றார்.

    அப்போது உடன் இருந்த சேகர் பாபு கண்ணீர் விட்டு அழுதார். தொண்டர்களில் சிலரும் அழ அவர்களை நோக்கி அழக் கூடாது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

    நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் மு.க. ஸ்டாலின் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்

  2. பிரதமர் மோதி மற்றும் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த தவெக தலைவர் விஜய்

  3. தமிழக வெற்றிக் கழகம் வெற்றி குறித்து சீமான் கூறியது என்ன?

  4. மு.க. ஸ்டாலின் ராஜினாமா ஏற்பு

    முதலமைச்சர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்த நிலையில் அவரது ராஜினாமாவை ஆளுநர் அர்லேகர் ஏற்றார்.

    சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 118 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது

  5. "நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே” - மு.க. ஸ்டாலின்

  6. "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர்" - திருமாவளவன்

    தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், “ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப் பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என்பதே ஆகும். 2016 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாக முன்மொழிந்ததை, பத்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெகுமக்கள் வழிமொழிந்துள்ளனர் என்றே நம்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

    இந்த முடிவுகள் தனக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதிமுக தலைமையிலான “சாதிய- மதவாத சங் பரிவார் கூட்டணியை” மக்கள் வெகுவாகப் புறக்கணித்துள்ளனர் என்பது திமுக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    “மதவழி சிறுபான்மையினருக்கும் இன்னபிற விளிம்புநிலை மக்களுக்கும் எதிரான சங் பரிவார் அரசியலைத் தமிழ் மண்ணில் வேரூன்றவிடக் கூடாது என்பதே எமது கூட்டணியின் முதன்மையான நோக்கமாக இருந்தது.

    இத்தேர்தலில் எமது இலக்கு தமிழ் மண்ணில் மதசார்பின்மையைப் பாதுகாப்பதே ஆகும். ஆகவே, தவெகவை எமது எதிர்ப்பின் முதன்மை இலக்காக யாம் முன்னிறுத்தவில்லை. மாறாக, பாஜக, அதிமுக ஆகியவற்றை அம்பலப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டினோம். அதன்மூலம், அதிமுக -பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு மட்டுமின்றி தவெகவுக்கும் இயல்பாய் பிரிந்துபோனதை அறியமுடிகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.

  7. விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து

  8. அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்திய தவெக வேட்பாளர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

    நேற்று (மே 4) வாக்கு எண்ணிக்கையின்போது இருவருக்கும் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில், கடைசி சுற்றான 30ம் சுற்றின் முடிவில் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேசமயம், பெரியகருப்பன் 83,374 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

  9. அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக - சில தகவல்கள்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளன. முடிவுகள் குறித்த முக்கிய தகவல்களை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

    • சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • ஆட்சியமைக்க 118 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எனவே, அக்கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
    • தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.
    • விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து குவிந்துவரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோதி உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    • திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • “மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அதிமுக மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்.” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  10. வணக்கம் நேயர்களே

    பிபிசி தமிழின் நேரலை பக்கத்தில் செய்திகளை தொகுத்து வழங்குவது செய்தியாளர் நந்தினி வெள்ளைச்சாமி.

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், அடுத்தடுத்த நிகழ்வுகள், அதுகுறித்த புகைப்படங்கள், காணொளிகள், செய்தியாளர்களின் பகுப்பாய்வுகளை அறிந்துகொள்ள தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  11. நன்றி நேயர்களே!

    தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான நேரலைப் பக்கத்தில் எங்களுடன் இணைந்திருந்ததற்கு நன்றி.

    தேர்தல் முடிவுகள் தொடர்பான பகுப்பாய்வுகள், கள நிலவரங்கள், அடுத்த கட்ட அரசியல் சூழல் குறித்த தகவல்கள் இந்தப் பக்கத்தில் தொடர்ந்து வழங்கப்படும். நாளையும் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  12. விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இரவு 8 மணி நிலவரப்படி தவெக 73 இடங்களில் முன்னிலை 33 இடங்களில் வெற்றி.

  13. "சிறப்பான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இரவு 8 மணி நிலவரப்படி தவெக 73 இடங்களில் முன்னிலை 33 இடங்களில் வெற்றி.

  14. "மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்" - உதயநிதி

    சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

    வெற்றி சான்றிதழை பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெற செய்த இந்த தொகுதி மக்களுக்கு நன்றி. நல்ல சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி.

    தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவை, தீர்ப்பை கொடுத்திருக்கின்றனர். அந்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்ற அனைவருக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

    தவெக அதிக இடங்களில் முன்னிலை பெறுவது குறித்த கேள்விக்கு, “நாளை அநேகமாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கூட்டம் நடக்கும். இதுதொடர்பாக திமுக தலைவர் அறிவுறுத்தல்களை வழங்குவார்” என்றார்.

  15. தவெகவுக்கு பிரதமர் மோதி வாழ்த்து

    தமிழக வெற்றிக் கழகத்துக்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி. மக்களின் பிரச்னைகள் மீது கவனம் செலுத்துவதிலும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.

    சிறப்பான செயல்பாட்டை நிகழ்த்திய தவெகவுக்கு வாழ்த்துகள்.

    தமிழகத்தின் முன்னேற்றத்தையும் அதன் மக்களின் நல்வாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.” என பதிவிட்டுள்ளார்.

  16. தமிழ்நாட்டில் தோல்வியை சந்தித்த முதலமைச்சர்கள்

  17. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி

  18. மு.க.ஸ்டாலினை தோற்கடித்த தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு கூறியது என்ன?

    சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த வி.எஸ். பாபு வெற்றி பெற்றுள்ளார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்துள்ளார்.

    வெற்றி சான்றிதழை பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.எஸ். பாபு, “விஜய் எந்த வழியில் செல்கிறாரோ அந்த வழியில் நாங்கள் தொண்டனாக இருந்து செயல்படுவோம்” என்றார்.

    அதிக இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு, “எல்லா புகழும் தளபதிக்கே (விஜய்). வெற்றி பெற்றது நான் அல்ல, தளபதிதான். முழு வெற்றிக்கும் அவர்தான் காரணம்.

    என் தொகுதியில் மக்களிடம் இருந்து லஞ்சம் பெறாமல் திட்டங்களை செயல்படுத்துவோம்.” என்றார்.

  19. "அனைத்து தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து வாக்களித்துள்ளனர்" - செங்கோட்டையன்

    அனைத்து தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களித்துள்ளதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கோபிச்செட்டிபாளையத்தில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    “பல்வேறு சோதனைகளை கடந்து மக்களுக்கு சேவை செய்ய ஒரு தலைவர் உள்ளார் என்று மக்கள் விரும்புகிற தலைவராக தவெக தலைவர் இருக்கிறார். தமிழகம் முழுவதும் விதிகளுக்கு உட்பட்டு பல பகுதிகளுக்குச் சென்றார் விஜய். யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல, அவர்தான் வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்து இருக்கின்றனர்.

    நாளை தமிழகம் இந்தியாவுக்கு ஒரு வழிகாட்டியாக உருவாவதற்கு இயற்கையால் கொடுக்கப்பட்டிருக்கிற வரமாக நான் கருதுகிறேன். உயிர்மூச்சு உள்ளவரை அவரோடு இணைந்து பணிபுரிவேன்” என தெரிவித்தார்.

  20. தேர்தலில் மார்ட்டின் குடும்பத்தாரின் நிலை என்ன?

    'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் குடும்பத்தில் மூன்று பேர் வெவ்வேறு கட்சி சார்பாக போட்டியிட்டனர். அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் என்ன நிலவரம்?

    மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது அத்தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அத்தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளல், தவெக சார்பில் கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அத்தொகுதியில், திமுக சார்பில் கார்த்திக் மோகன், அதிமுக சார்பில் விஜயகுமார், நாம் தமிழர் சார்பில் ரோஷிணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அதேபோன்று, மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ்மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து காமராஜ் நகரில் போட்டியிட்டார். இத்தொகுதியில் தற்போது அவர் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்திதியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.