மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலின் பேரிலேயே இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இத்தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Admit Card) வெளியாகும் அட்டவணைகள் ஆகியவை விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக வெளியிடப்படும்.
சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் தேசிய தேர்வு முகமை, "இப்பிரச்னை குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதற்காக, இதனை மத்திய புலனாய்வுத் துறையிடம் (CBI) ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு தேசிய தேர்வு முகமை முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் வழங்கும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "இத்தேர்வை மீண்டும் எழுதுவதற்கு மாணவர்கள் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை; அதற்கெனக் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கெனவே செலுத்தியிருந்த தேர்வுக் கட்டணம் அவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும். மேலும், இத்தேர்வு NTA-வின் சொந்த வளங்களைப் பயன்படுத்தியே நடத்தப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு குறித்து ராகுல் காந்தி கேள்வி
நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, திங்களன்று நீட் தேர்வு குறித்துக் கேள்விகளை எழுப்பினார்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "நீட் 2026 வினாத்தாள் கசிந்ததாக வந்த செய்தியை நான் அறிந்தேன். இதுவொரு தேர்வு இல்லை; நீட் இப்போது ஒரு ஏலமாக மாறிவிட்டது. தேர்வு தொடங்குவதற்குச் சரியாக 42 மணிநேரத்துக்கு முன்பே, பல கேள்விகள் வாட்ஸ்ஆப் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன." என தெரிவித்துள்ளார்.
"22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், ஓராண்டு முழுவதும் இரவும் பகலும் பாராமல், உறக்கமின்றிப் படித்துத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டனர். ஆனால் ஒரே இரவில், அவர்களின் எதிர்காலம் பகிரங்கமாக ஏலம் விடப்பட்டுள்ளது. இது நடப்பது முதல்முறையல்ல. கடந்த 10 ஆண்டுகளில், 89 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன; 48 முறை மறுதேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் அதே வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன; அதைத் தொடர்ந்து அதே மௌனமே நிலவுகிறது."
ராகுல் காந்தி மேலும் "பிரதமர் மோதி, ஒவ்வொரு தோல்விக்கும் நீங்கள் பொதுமக்களையே குறை கூறுகிறீர்கள் என்றால், அதில் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலமும் அடங்கும். 22 லட்சம் மாணவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுவிட்டது. இந்தியாவின் இளைஞர்களின் கனவுகளுக்கு, மோதி அரசை விடப் பெரிய அச்சுறுத்தல் வேறு எதுவும் இருக்க முடியாது." என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பிற தலைவர்களும் இப்பிரச்னை குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.