You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நேரலை, ரூ.2,500 உதவித்தொகை திட்டம் எப்போது அமல்? அமைச்சர் நிர்மல் குமார் பதில்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. "தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆளும் கட்சி அந்தஸ்தை இழந்தது. இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் 36 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொள்வார்கள் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்டாலின் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தன் எக்ஸ் பக்கத்தில், "தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது," என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது பதிவில், "தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  2. விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் தள்ளுமுள்ளு

    விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் காவல்துறையினர் தலையிட்டு அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவின் சிவி சண்முகம் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து, சிவி சண்முகத்தை விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். அதனை தொடர்ந்து, விழுப்புரம் அதிமுக புதிய மாவட்ட செயலாளராக பசுபதி என்பரை நியமித்தார். ஆனால் அந்த அறிவிப்பு செல்லாது என சிவி சண்முகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பசுபதி தரப்பினர் அதிமுக அலுவலகத்துக்குள் செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதிமுக அலுவலக சாவியை பெற்றுத் தர வேண்டும் எனவும் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை இருந்ததால் அதிமுக அலுவலகம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் பசுபதி தரப்பினர் உள்ளே செல்ல முயன்றனர். அதற்கு சிவி சண்முகம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சிவி சண்முகம் தரப்பினர் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனையடுத்து, சிவி சண்முகம் தரப்பினரை போலீசார் அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அதிமுக அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

  3. ரூ.2,500 உதவித்தொகை திட்டம் எப்போது அமல் ? அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பதில்

    இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தவெக தேர்தல் வாக்குறுதியான ரூ.2,500 உதவித்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்துப் பேசினார்.

    "பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடுகளை பட்ஜெட்டுக்குப் பிறகு தான் செய்ய முடியும். நிதி ஆதாரங்களை சரிசெய்து பட்ஜெட்டுக்குப் பிறகு தான் கொண்டு வர முடியும். இதனை அரசாணை மூலம் செயல்படுத்த முடியாது," என அவர் தெரிவித்தார்.

    மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "போதைப் பொருள் பயன்பாடு, மதுபான கூடங்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் மற்றும் சட்ட விரோதமாக இயங்கி வரும் குவாரிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை தயார் செய்ய வேண்டிய வேலைகளில் இருந்து வருகிறோம்." என்றார்.

  4. இந்தியாவில் பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்

    இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே 26-ஆம் தேதி கேரளாவை தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த முன்னறிவிப்பில் நான்கு நாட்கள் வரை கால இடைவெளி இருக்கக்கூடும்; அதாவது, பருவமழை மே 22 முதல் மே 30 வரையிலான காலகட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்தடையலாம்.

    வழக்கமாக, கேரளாவில் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி வாக்கில் தொடங்கும்; ஆனால் இம்முறை, அது வழக்கத்தை விட சுமார் ஆறு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளது.

    பசிபிக் பெருங்கடலில் எல் நினோ (El Nino) சூழல் உருவாகி வருவதன் காரணமாக, பருவமழையின் வேகம் குறையக்கூடும் என்றும், அதன் விளைவாக நாட்டில் குறைவான மழைப்பொழிவே எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    ஸ்கைமெட் வெதர் நிறுவனத்தின் கணிப்பின்படி, இந்த ஆண்டின் பருவமழை அளவு வழக்கமான அளவை விட 6 சதவிகிதம் குறைவாக இருக்கக்கூடும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு பருவமழை மாதங்களில், நாட்டின் இயல்பான மழைப்பொழிவு அளவு 868.6 மி.மீ ஆகும். இந்தத் தனியார் வானிலை ஆய்வு நிறுவனம், இம்முறை எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவு அளவு 94 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

    எல் நினோ என்றால் என்ன?

    பசிபிக் பெருங்கடலின் கிழக்குப்பகுதியில், அதாவது தென் அமெரிக்கக் கடற்கரைப் பகுதிகளில், கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு வானிலை நிகழ்வே எல் நினோ ஆகும்.

    இது இயல்பான வானிலை சுழற்சியைப் பாதித்து, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வழிவகுக்கிறது. இந்த ஆண்டு, எல் நினோ நிகழ்வின் காரணமாக இந்தியாவில் பருவமழை வலுவிழக்கக்கூடும்.

  5. அமெரிக்க மோசடி குற்றச்சாட்டு வழக்கில் 18 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த அதானி முடிவு

    அமெரிக்காவில் நடைபெற்று வரும் சிவில் மோசடி வழக்கை முடிவுக்கு கொண்டு வர 18 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

    இந்த வழக்கை அமெரிக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    2024-இல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், முக்கியமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் அமெரிக்க முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகவும் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ செய்யாத இந்த ஒப்பந்தம், எதிர்காலத்தில் அமெரிக்க மோசடி எதிர்ப்பு சட்டங்களை அதானி மீறுவதையும் தடை செய்கிறது.

    லஞ்ச எதிர்ப்பு சட்டங்களுக்கு அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் உடன்படுவதாக முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாக இந்தக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அதானி அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பெற்ற 175 மில்லியன் டாலர் உள்பட 750 மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றவை' என அதானி குழுமம் தெரிவித்திருந்தது.

    கௌதம் அதானி மீதான மோசடி குற்றச்சாட்டுகளை கைவிட அமெரிக்க அரசு முடிவெடுத்திருப்பதாக நியூ யார்க் டைம்ஸ், ராய்டர்ஸ் மற்றும் ப்ளும்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தன.

    ராபர்ட் கியுஃப்ரா தலைமையிலான புதிய வழக்கறிஞர் குழுவை அதானி பணியமர்த்திய பிறகு இந்த நகர்வு வந்திருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் முதன்மையான சட்ட நிறுவனத்தின் தலைவரான கியுஃப்ரா, அதிபர் டிரம்பின் தனிப்பட்ட சட்ட ஆலோசகர்களில் ஒருவராகவும் உள்ளார்.

    இவர் டிரம்புக்காகவும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளை அவர் கடந்த வாரம் சந்தித்ததாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

    மேலும் அதானி மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் கைவிட்டால் அவர் அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வார் என்றும் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவார் என்றும் கியுஃப்ரா தெரிவித்துள்ளார்.

  6. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்தம் நீட்டிப்பு

    இஸ்ரேல் - லெபனான் இடையே ஏற்கெனவே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அது மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

    அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர்நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

    "பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் பென்டகனில் மே 29-ஆம் தேதி தொடங்கும். இதில் இரு நாடுகளின் ராணுவ குழுக்களும் கலந்துகொள்வார்கள்," என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்தார்.

    முன்னதாக ஏப்ரல் 16-ஆம் தேதி அன்று போர்நிறுத்தம் ஒன்றை டிரம்ப் அறிவித்திருந்தபோதும் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    புதன்கிழமை மட்டும் லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 8 குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  7. வணக்கம் நேயர்களே!

    இன்று (மே 16) மதியம் வரை பிபிசி தமிழ் நேரலை பக்கத்தில் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் சர்வதேச செய்திகளைத் தொகுத்து வழங்குவது மோகன்.

  8. ‘எதிர் நிலைப்பாடு எடுத்த அதிமுக நிர்வாகிகள் பதவி பறிப்பு’- எடப்பாடி பழனிசாமி

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 13) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுகவின் 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள், “விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

    ஆனால், “அதிமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 பேரும் தவெக அரசை எதிர்த்துதான் வாக்களிப்பார்கள்." என்று எடப்பாடி பழனிசாமி தனது சட்டப்பேரவை உரையில் குறிப்பிட்டிருந்தார்.

    சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், நத்தம் இரா. விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் காமராஜ் ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட பலரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  9. நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

    மருத்துவப் படிப்புகளில் நீட் அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத்தேர்வை, வினாத்தாள் கசிவு புகார்களைத் தொடர்ந்து தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ.) ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  10. ‘திமுக-வுக்கு யதார்த்தம் புரியவே போவதில்லை’- முதலமைச்சர் விஜய்

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 13) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

    இந்நிலையில் இந்த வாக்கெடுப்பு குறித்தும், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்கள் குறித்தும் எக்ஸ் தள அறிக்கை ஒன்றின் மூலம் முதலமைச்சர் விஜய் பதிலளித்துள்ளார்.

    “நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    “பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை” என்றும் விஜய் விமர்சித்துள்ளார்.

    நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், “கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட தி.மு.க பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் மிகவும் குறைவு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    “சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.” என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

    “மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால் தான் அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம்.”

    “மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் ‘புஷ்பா அரசு’ என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் விஜய்.

  11. ‘திருமாவளவன் முதலமைச்சர், அதிமுகவினர் அமைச்சர்கள்’- சி.வி. சண்முகம் கூறியது என்ன?

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 13) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பிறகு, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது பேசிய சி.வி. சண்முகம், “25 பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவினர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அதிமுகவில் சிறுபான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்” என்று கூறினார்.

    “புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்கப்போவதாக தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து பெற்றார்” என்றும் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

    “திமுகவை எதிர்த்து அரசியல் செய்த எங்களை திமுக ஆதரவோடு ஆட்சியமைக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    “திருமாவளவனை முதலமைச்சராகவும், அதிமுகவினரை அமைச்சர்களாகவும் ஆக்க திமுக முன் மொழிந்தது. ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவுடன் போக முடிவு செய்த நிலையில் ஏன் தவெக-வை ஆதரிக்கக் கூடாது என்று கேட்டோம், ஆனால் அதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று சி.வி சண்முகம் தெரிவித்தார்.

  12. முதலமைச்சரின் சிறப்பு பணி அலுவலர் ராதன் பண்டிட் நியமனம் ரத்து

    சட்டப்பேரவை வரை எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து முதலமைச்சரின் சிறப்பு பணி அலுவலர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை (officer on Special Duty to Chief Minister of Tamil Nadu (Politics) ) தமிழக அரசு திரும்பப் பெற முடிந்துள்ளது.

    விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை பதவியேற்றதைத் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தவெகவைச் சேர்ந்த ரிக்கி ராதன் பண்டிட் முதலமைச்சரின் சிறப்பு பணி அலுவலராக (அரசியல்) நியமிக்கப்பட்டிருந்தார்.

    ஜோதிட பின்னணி கொண்ட அவரின் நியமனத்திற்கு தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

    இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அது எதிரொலித்தது. பிரேமலதா, விஜயகாந்த், வன்னி அரசு உள்பட பலரும் இது குறித்து பேசியிருந்தார்.

    அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், அந்த முடிவுகளை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அவரின் நியமனம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

  13. "நான் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல" - சிபிஐ இயக்குநர் தேர்வு விவகாரத்தில் ராகுல் காந்தி அறிக்கை

    சிபிஐ அமைப்பின் இயக்குநர் தேர்வு விவகாரத்தில் தனக்கு கருத்து வேறுபாடும் இருப்பதாக தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர், "நான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் இல்லை." என்றும் கூறியுள்ளார்.

    புதிய சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் பிரதமர் நரேந்திர மோதியின் இல்லத்தில் செவ்வாய்கிழமை அன்று நடைபெற்றது. இந்தியாவின் முதன்மை விசாரணை அமைப்பான சிபிஐ-யின் இயக்குநரை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெறுவர்.

    இந்த நிலையில் தேர்வு நடைமுறையில் தனக்கு மாற்றுக் கருத்து இருப்பதாக பிரதமர் மோதிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

    அதில், "உங்களது அரசாங்கம் சிபிஐ-யை தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விசாரணை அமைப்பான சிபிஐ அரசியல் எதிரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களைக் குறிவைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனம் கைப்பற்றப்படாமல் இருப்பதற்காக தான் தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சி தலைவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நடைமுறையில் நீங்கள் எனக்கு எந்தப் பங்கும் கொடுக்காதது வருத்தமளிக்கிறது."

    "பல முறை கேட்ட பிறகும் தகுதியுள்ள நபர்கள் பற்றிய அறிக்கை எனக்கு வழங்கப்படவில்லை. மாறாக, குழு கூட்டத்தில் முதல்முறையாக 69 நபர்களின் அறிக்கையை ஆராயுமாற்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. முழுமையான அறிக்கை எனக்கு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு நபரின் வேலை மற்றும் பின்னணியைப் புரிந்துகொள்ள இந்த அறிக்கையை ஆழமாக ஆய்வு செய்வது முக்கியமானது." எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்தக் கடிதத்தில், "தேர்வுக் குழுவுக்கு தேவையான தகவல்களை வழங்காமல் அதனை வெறும் சம்பிரதாயமாக அரசு மாற்றியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பது வெறும் 'ரப்பர் ஸ்டாம்ப்' அல்ல. எனது அரசமைப்பு கடமைகளை கைவிட்டுவிட்டு இந்தச் சார்பான நடைமுறையில் என்னால் அங்கம் வகிக்க முடியாது." என்றும் குறிப்பிட்டார்.

    பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி உடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கலந்து கொண்டதும் தற்போதைய சிபிஐ இயக்குநரின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதி உடன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  14. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு

    தங்கம், வெள்ளியின் அத்தியாவசியமற்ற இறக்குமதியைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரியை 15% வரை உயர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியால் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வரும் சூழலில் பொக்கிஷமான உலோகங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரி 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதம் ஆக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அந்திய செலாவணி சேமிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக சமூக நலக் கட்டணம் மற்றும் வேளாண் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி செஸ் நிதி இன்று (மே 13) முதல் அதிகரிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  15. "இரான் போரை முடிக்க சீனா தேவையில்லை" - டிரம்ப்

    இரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவின் உதவி தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அரசுமுறை பயணமாக சீனா செல்வதற்கு முன்பாக டிரம்ப் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    தனது சீன பயணத்தின்போது அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

    "நாங்கள் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. வெளிப்படையாகச் சொன்னால், எங்களின் நிகழ்ச்சி நிரலில் இரான் இல்லை, ஏனெனில் இரானை ஏற்கெனவே எங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்," என்று தெரிவித்தார் டிரம்ப்.

    இரான் தொடர்பாக பேசிய டிரம்ப், "ஒன்று நாங்கள் ஒப்பந்தத்தை அடைவோம் அல்லது இரான் அழிக்கப்படும்." என எச்சரித்தார்.

    மே 13 முதல் 15 வரை அரசு முறை பயணமாக டிரம்ப் சீனா வருவதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

    கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். முதலில் மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது.

  16. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்பது மோகன். இன்று (மே 13) தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகள், அரசியல் மற்றும் செய்திகளை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

  17. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தவெகவினர் மீது நடவடிக்கை - என்.ஆனந்த எச்சரிக்கை

    தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ''கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்துக்கொள்ளக்கூடாது'' என்று தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த அவர், ''கட்சியின் நிர்வாகிகள் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பதாகைகளை வைக்கக்கூடாது, கொண்டாட்டங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூட்டாது'' என்று அறிவிறுத்தியுள்ளார்.

    ''அவ்வாறு இடையூறு செய்யும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அவர் எச்சரித்துள்ளார்.

  18. தமிழ்நாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் யார்?

    தமிழ்நாடு அரசில் கூடுதல் தலைமை செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து தேர்தல் சமயத்தில் மாற்றப்பட்டு விடுப்பில் இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை அமுதா ஐஏஎஸ் கூடுதலாக கவனித்து வந்தார்.

    மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனராக இருந்த சித்திக் ஐ ஏ எஸ், நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாநில திட்டக்குழு இயக்குனராக இருந்த சுவர்ணா ஐஏஎஸ், சுற்றுலா கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலை துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்

    கூட்டுறவுத்துறை பதிவாளராக இருந்த நந்தகுமார் டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்

    நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த அண்ணாதுரை முதலமைச்சரின் மூன்றாவது தனிச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கூடுதல் செயலராக இருந்த விஷ்ணு ஐஏஎஸ் முதலமைச்சரின் கூடுதல் செயலராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சாய்க்குமார் உத்தரவிட்டுள்ளார்.

  19. விசிக தலைவர் திருமாவளவனுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு

    தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க விசிக இறுதி நேரத்தில் ஆதரவு தந்த நிலையில், திருமாவளவனை நேரில் சந்தித்து விஜய் நன்றி தெரிவித்தார்.

    சென்னை வேளச்சேரில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனின் இல்லத்திற்கு சென்ற விஜய்யை திருமா வாசலில் நின்று வரவேற்றார்.

    இந்த சந்திப்பில் விசிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்,

  20. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவரை சந்தித்த முதலமைச்சர் விஜய்

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்தார்.

    தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவை வழங்கினர்.

    இந்தநிலையில் அக்கட்சியின் தலைவர்களை விஜய் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்யமூர்த்தி பவன் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை , பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.