இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ வியூகங்களை டிரோன்கள் எவ்வாறு மாற்றியமைக்கின்றன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுகல் புரோஹித், பிரசேத பாஞ்சா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
ஓராண்டுக்கு முன்பு, பாகிஸ்தானுக்குள் இருப்பதாகக் கூறப்படும் "பயங்கரவாதத் தளங்கள்" மீது இந்தியா தாக்குதல்களை நடத்தியது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டது.
2025 ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களே காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியது.
இருப்பினும் பாகிஸ்தான் இதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மறுத்தது.
இதனைத் தொடர்ந்து, 2025 மே 7 முதல் 10 வரை நடந்த நிகழ்வுகள் முற்றிலும் புதியதாக இருந்தன.
இது துணைக்கண்டத்தில் அணு ஆயுதங்களைக் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கு இடையே நடந்த முதல் ட்ரோன் போர் எனக் கருதப்படுகிறது.
இரு தரப்பிலும் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களைக் குறிக்கும் 'யிஹா' , 'ஹரோப்' மற்றும் 'சோங்கோர்' போன்ற பெயர்கள் இப்போது பிராந்தியத்தில் போருடன் தொடர்புடைய பொதுவான மொழியாக மாறிவிட்டன.
இந்த ட்ரோன்கள் பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தாலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஏமனில் அமெரிக்கா ஏராளமான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால், இந்த அதிகாரம் இப்போது ஒரு நாட்டிற்கு மட்டுமானதாக மட்டும் இல்லை.
மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய ட்ரோன் தொழில்நுட்பத்தின் காரணமாக இன்றைய காலத்தில் போர் புரியும் முறை மாறிவிட்டது.
யுக்ரேன் போர் முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் சம்பந்தப்பட்ட தாக்குதல்கள் வரை, போரில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
ஓராண்டுக்கு முன்பு, பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகளை அழிக்க இந்தியா குரூஸ் ஏவுகணைகளுடன் சேர்ந்து லொயிட்டரிங் வெடிமருந்துகளை பயன்படுத்தியது. இந்திய இலக்குகளைத் தாக்கப் பாகிஸ்தானும் ஸ்வார்ம் ட்ரோன்களை பயன்படுத்தியது.
ஓராண்டுக்குப் பிறகும், அந்த நான்கு நாட்களில் நடந்த நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் புரிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'ட்ரோன் போர் '

பட மூலாதாரம், Getty Images
வியாழக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் ட்ரோன்களால் ஏற்படும் சவால்களை ஒப்புக்கொண்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஓராண்டு நிறைவையொட்டி, ராணுவம் மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து நாடு தழுவிய ட்ரோன் எதிர்ப்பு கொள்கையை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ட்ரோன் பயன்பாடு 2025 மே மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அரசாங்கத் தரவுகளின்படி, 2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை, 3,323 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 1,816 ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கடத்த இவை பயன்படுத்தப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் பாதுகாப்பு ஆலோசகரும், எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கடத்தல்காரர்கள் ஹெராயின் அனுப்புவது குறித்துப் பேசினார்.
2021 ஜூன் மாதம், ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தில் இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அந்தத் தாக்குதலில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகப் பின்னர் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, விமானப்படை விமானங்கள் இலக்குகளாக இருந்தன. இருப்பினும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ராணுவத் தளங்களில் பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் சையத் முகமது அலி கூறுகையில், இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டாலும் அல்லது சமீபகாலமாக தாலிபன்களால் பயன்படுத்தப்பட்டாலும், பாகிஸ்தானும் ட்ரோன்களால் சவால்களை எதிர்கொள்கிறது என்றார்.
2025 ஆம் ஆண்டிற்குள், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும் தாக்குதல்களிலும் ட்ரோன்கள் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கின.
சீனா மற்றும் பாகிஸ்தானுடன் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ள பதற்றத்தால் இந்தியாவின் எல்லை மற்றும் வான்வெளிப் பாதுகாப்பு மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. அதே நேரத்தில் 2024-க்குப் பிறகு இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரானுடன் பாகிஸ்தானும் மோதல்களைச் சந்தித்துள்ளது.
எனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஆயுதம் ஏந்திய மற்றும் ஆயுதம் ஏந்தாத ட்ரோன்கள் உட்பட தங்களது ராணுவத் திறன்களை மேம்படுத்தி வருகின்றன.
புதிய அச்சுறுத்தல்கள், புதிய தற்காப்புகள்

பட மூலாதாரம், Getty Images
இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, வான்வழி செயல்பாடுகளின் தலைமை இயக்குநராக உள்ளார்.
மோதலின் போது பாகிஸ்தான் தொடர்ச்சியாக நடத்திய ட்ரோன் தாக்குதல்களே இந்தியாவின் பதிலடிக்கு முக்கியக் காரணம் என்று அவர் சமீபத்தில் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், "முன்பு நாம் எதிரி நாட்டு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அல்லது ஏவுகணைகளை மட்டும் கண்காணித்தால் போதுமானதாக இருந்தது. இப்போது பெரியது முதல் சிறியது வரை, வெவ்வேறு அளவுகளில் மற்றும் வெவ்வேறு உயரங்களில் பறக்கும் அனைத்து வகை ட்ரோன்களையும் நாம் அடையாளம் காண வேண்டியுள்ளது" என்றார்.
ட்ரோன்களின் தாக்கம் என்பது போருடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் வழக்கமான வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலாக படிப்படியாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், "ட்ரோன் செயல்பாடுகள் அதிக செயல்திறன் மிக்கவை, ஏனெனில் அவை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கின்றன" என்றார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அதன் விலை ஒரு தொடர்ச்சியான கவலையாக உள்ளது.
"மலிவான ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு விலையுயர்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்துவது எங்களுக்கு இயலாத காரியம். எனவே எங்களது தீர்வுகள் செலவைக் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன" என்று இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், இந்திய விமானப்படையின் துணைத் தளபதியான ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, குறைந்த விலை ட்ரோன்களின் தாக்கத்தை மட்டும் மிகைப்படுத்திக் கூறுவதற்கு எதிராக எச்சரித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நமக்கு அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்கள் தேவை, ஆனால் குறைந்த விலை ட்ரோன்களால் அதிகபட்சமாக எதிரியைத் தொடர்ந்து தொந்தரவு செய்யவும், சில இலக்குகளைத் தாக்கவும் மட்டுமே முடியும். நமக்கு ஒரு தீர்க்கமான முடிவு வேண்டுமென்றால், இலக்கை முழுமையாக அழிக்கும் திறன் நம்மிடம் இருக்க வேண்டும்" என்றார்.
பிரம்மோஸ் ஏவுகணை போன்ற மேம்பட்ட ஆயுதங்களால் மட்டுமே இந்தப் பணியைச் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், "அதனால்தான் ட்ரோன்களுடன் இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பங்களும் நமக்குத் தேவைப்படுகின்றன" என்றும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
மோதலின் போது ட்ரோன் தொடர்பான முக்கிய அச்சுறுத்தல்களைத் முறியடித்ததாகப் பாகிஸ்தானும் கூறுகிறது.
இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் சையத் முகமது அலி கூறுகையில், ட்ரோன்களுக்கு எதிராக "இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அல்லாத பாதுகாப்பு அமைப்புகளை" பாகிஸ்தான் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, இந்தியாவால் ஏவப்பட்ட இஸ்ரேலிய தயாரிப்பான ஹெரான் ட்ரோன்களுக்கு எதிராக இவை திறம்படப் பயன்படுத்தப்பட்டன.
பாகிஸ்தானுக்குள் நடக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் வழக்கமான வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலாக ட்ரோன் அடிப்படையிலான செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகப் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இருப்பினும், ட்ரோன் பாதுகாப்பிற்கான இந்த மிகப்பெரிய சவால் தெற்காசியாவிற்கு மட்டும் உரியதல்ல.
இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ரேடஜிக் ஸ்டடீஸ் (ஐஐஎஸ்எஸ்) அறிக்கையின்படி, 2026 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், இரான் தனது அண்டை நாடுகள் மீது நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது.
இவற்றில் மிகக் குறைவானவை மட்டுமே இலக்குகளை அடைந்தபோதிலும், இந்தத் தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி மற்றும் நிதிச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தின.
இரானில் இருந்து ஏவப்பட்ட ஏராளமான ஆயுதங்களை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் தடுத்த போதிலும், சில முக்கியமான இலக்குகளைத் தாக்கும் இரானின் திறன், அவர்களின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளிலும் சில வரம்புகள் இருப்பதைக் காட்டுகிறது என்று அந்த அறிக்கை கூறியது.
இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, தனது எல்லைகளிலுள்ள முக்கியப் பகுதிகளில் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளில் முதலீடு செய்துள்ளதாக இந்தியா கூறுகிறது.
ராணுவ பலத்தை அதிகரிக்க

பட மூலாதாரம், Getty Images
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் ஐந்தாவது இடத்தில் பாதுகாப்புக்காக செலவு செய்யும் நாடாக இருந்தது. அதன் ராணுவச் செலவு சுமார் 92.1 பில்லியன் டாலர்களாக இருந்தது. பாகிஸ்தானின் ராணுவச் செலவு சுமார் 11.9 பில்லியன் டாலர்களாக இருந்தது.
இந்திய ஆயுதப் படைகள் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பல ராணுவ அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் தரவுகளின்படி, தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை ஹெரான் மற்றும் செர்ச்சர் எம்கே-I/II ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றன.
இந்த ட்ரோன்கள் நடுத்தர-உயரம் மற்றும் நீண்ட தூரம் செல்லக்கூடிய ட்ரோன்கள் ஆகும்; இவை முதன்மையாகக் கண்காணிப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
செர்ச்சர் ட்ரோன் இந்தியாவின் முதல் ட்ரோன் ஆகும், இது 1999 இல் வாங்கப்பட்டது. முன்னாள் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக், 1998 மார்ச்சில் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு அருகில் செர்ச்சர்-1 ட்ரோனின் செயல்விளக்கத்தைப் பார்த்ததை நினைவு கூர்ந்தார். "இது போன்ற முதல் செயல்விளக்கம் அதுதான்" என்று அவர் கூறினார்.
ஹெரான் ட்ரோன் அதன் பணிக்கு ஏற்ப சுமார் 35,000 அடி உயரத்தில் 45 மணிநேரம் வரை பறக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. செர்ச்சர் ட்ரோன் இதைவிடக் குறைவான திறனையே கொண்டுள்ளது.
இப்போது இந்தியா நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட ட்ரோன்களை மட்டுமல்லாமல், அதிக அழிவுத் திறன் கொண்ட ட்ரோன்களையும் விரும்புகிறது.
ஒரு அறிக்கையின்படி, 31 எம்கியூ-9B உயர் உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடிய ஆயுதம் ஏந்திய ட்ரோன்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் 3.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இவற்றில் 15 கடற்படைக்கும், தலா 8 தரைப்படை மற்றும் விமானப்படைக்கும் வழங்கப்படும்.
இந்த ட்ரோன்களின் விநியோகம் 2029 முதல் தொடங்கி 2030க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் மூத்த கடற்படை விமானப் போக்குவரத்து அதிகாரி (ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல்) பி.ஜி. பிலிப்போஸ், எம்கியூ-9B ட்ரோனை "மிகவும் சக்திவாய்ந்த தளம்" என்று விவரித்தார்.
கடற்படை ஏற்கனவே அதன் கடல்சார் பதிப்பை குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வருவதாகவும், கண்காணிப்பு மற்றும் மனிதாபிமான உதவி உட்பட பல்வேறு பணிகளுக்கான அதன் திறன் இதனை ஒரு 'கேம்-சேஞ்சராக' மாற்றுகிறது என்றும் அவர் கூறினார்.
ஆனால் வெடிமருந்துகளைச் சுமந்து சென்று இலக்கைத் தாக்கும்போது வெடிக்கக்கூடிய 'லோயிட்டரிங் வெடிமருந்துகள்' அல்லது 'காமிகாஸே' ட்ரோன்கள் எனப்படும் தாக்குதல் ட்ரோன்களுக்கு இந்தியா இன்னும் பெருமளவில் இறக்குமதியையே சார்ந்துள்ளது.
ஐஐஎஸ்எஸ் தரவுகளின்படி, இந்தியா பயன்படுத்தும் முக்கியஅமைப்புகளில் இஸ்ரேலிய ஹரோப் , மினி-ஹார்பி மற்றும் ஸ்கை ஸ்டிரைக்கர் பெங்களூருவைச் சேர்ந்த ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது), அத்துடன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட நாகாஸ்த்ரா ஆகியவை அடங்கும்.
கண்காணிப்பு மற்றும் ஸ்வார்ம் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் குவாட்காப்டர் போன்ற சிறிய தந்திரோபாய ட்ரோன்களில் இந்தியா சுயசார்பு அடைய முயற்சிக்கும் ஒரு பகுதியாக உள்ளது.
"ஹியூமன்-இன்-தி-லூப்" எனப்படும் அமைப்பில் தற்போது பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். அதாவது இந்த அமைப்பில், ஒரே ஒரு ஆபரேட்டர் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களைக் கட்டுப்படுத்த முடியும்.
விநியோகச் சங்கிலி அபாயங்கள் மற்றும் சீனாவைச் சார்ந்திருத்தல்

பட மூலாதாரம், Getty Images
ஆனால் ஒரு முக்கியமான சிக்கல் இன்னும் நீடிக்கிறது. அது விநியோகச் சங்கிலி , அதாவது அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தொடர்பான சிக்கல் .
ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மன்தீப் சிங் தற்போது ஒரு தனியார் ட்ரோன் நிறுவனத்தின் பாதுகாப்புத் துறைத் தலைவராக உள்ளார்.
இதுகுறித்து பிபிசியிடம் அவர் கூறுகையில், விமானக் கட்டுப்பாட்டாளர்கள் , வேகக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு வன்பொருள் உட்பட ட்ரோன்களின் முக்கிய உதிரிபாகங்களின் இறக்குமதியில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் விளக்குகையில், "ஒரு ட்ரோனில் நான்கு முக்கிய பாகங்கள் உள்ளன. முதலாவதாக, பிளைட் கன்ட்ரோலர், இது ட்ரோனின் மூளை போன்றது. இரண்டாவதாக, ஸ்பீட் கன்ட்ரோலர், இது பிளைட் கன்ட்ரோலரில் இருந்து மோட்டாருக்குச் செய்திகளை அனுப்புகிறது, இதனால் ட்ரோன் பறக்கும்போது சரியாகச் செயல்படுகிறது"என்றார்.
"மூன்றாவதாக, ட்ரோனின் ரிசீவர் மற்றும் டிரான்ஸ்மிட்டர், இவை ட்ரோனுக்கும் அதை இயக்குபவருக்கும் இடையே தொடர்பைப் பேணுகின்றன. நான்காவதாக, கேமரா. இப்போது சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சமீப காலம் வரை இந்த நான்கு முக்கியமான பாகங்களுக்கும் நாம் பெருமளவில் இறக்குமதியையே சார்ந்திருந்தோம்."
மேலும் அவர் கூறுகையில், "மலிவான சீனப் பாகங்களுக்கு மாற்றாக உள்நாட்டுப் பொருட்களை உருவாக்குவதற்கு நாம் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன"என்றார்.
"ஆபரேஷன் சிந்தூர் வழங்கிய மிகப்பெரிய பாடம் என்னவென்றால், இந்தியா சீனாவின் மீதான தனது சார்பைக் குறைக்க வேண்டும் மற்றும் அதன் விநியோகச் சங்கிலி வலுவாகவும் நம்பகமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான்."
"சீனாவுடன் தொடர்புடைய அமைப்புகள் தரவுப் பாதுகாப்பு, அமைப்புக் கட்டுப்பாடு மற்றும் விநியோகச் சங்கிலி நம்பகத்தன்மை குறித்த கவலைகளை எழுப்புகின்றன" என்று இந்திய ஆயுதப் படைகளுக்கு உபகரணங்களை வழங்கும் ஐஜி டிஃபென்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் சிஇஓ-வுமான போதிசத்வா சங்கப்ரியா கூறினார்.
மேலும், "இந்தியா தனது சொந்த பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதும், அதன் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதும் முக்கியம். நாங்கள் அந்த திசையில் பணியாற்றி வருகிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை வாங்குவதில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
வழக்கமான ராணுவப் படைகளுக்காகக் குறைவாகச் செலவழித்த போதிலும், ஆயுதம் ஏந்திய ட்ரோன்களைப் பெறுவதில் பாகிஸ்தான் இந்தியாவை விட வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிகிறது.
எஸ்ஐபிஆர்ஐ-இன் ஆயுதப் பரிமாற்றத் தரவுத்தளத்தின்படி, 2021 மற்றும் 2025-க்கு இடையில் பாகிஸ்தான் மொத்தம் 35 ஆயுதம் ஏந்திய ட்ரோன்களைப் பெற்றுள்ளது.
இவற்றில் துருக்கியிடமிருந்து பெறப்பட்ட மூன்று அகின்ஜி ட்ரோன்கள், சீனாவிலிருந்து 23 விங் லூங்-2 ட்ரோன்கள் மற்றும் துருக்கியிடமிருந்து ஒன்பது பைராக்டர் டிபி-2 ட்ரோன்கள் அடங்கும்.
இதற்கு நேர்மாறாக, இந்தியா தான் ஆர்டர் செய்துள்ள எம்கியூ-9பி ட்ரோன்களின் வருகைக்காக இன்னும் காத்திருக்கிறது. பாகிஸ்தான் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பல ட்ரோன் அமைப்புகளையும் பயன்படுத்துகிறது.
ஷபார் தொடர், குறிப்பாக ஷபார்-III, பாகிஸ்தானின் மிகவும் மேம்பட்ட உள்நாட்டு ட்ரோன் திறனாகக் கருதப்படுகிறது. இது நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடிய ஒரு போர் ட்ரோன் ஆகும். இது சுமார் 30 மணிநேரம் பயணிக்கும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் இதில் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
பர்ராக் என்பது பாகிஸ்தானின் முதல் போர் ட்ரோன் ஆகும், இது 2015-இல் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நேரடி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது. உகாப் ட்ரோன் கண்காணிப்பு மற்றும் ஆயுதங்களை வழிநடத்துவதில் உதவுவது போன்ற தந்திரோபாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ட்ரோன்களில் பெரும்பாலானவை பாகிஸ்தானிலேயே தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், என்ஜின்கள் போன்ற சில பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், பாகிஸ்தான் துருக்கி மற்றும் சீனாவிலிருந்து மேம்பட்ட ட்ரோன்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த ட்ரோன்கள் கண்காணிப்பு, தாக்குதல் மற்றும் நீண்ட தூரம் பறக்கும் திறன் கொண்டவை.
ஐஐஎஸ்எஸ் தரவுகளின்படி, பாகிஸ்தான் துருக்கியில் தயாரிக்கப்பட்ட யேஹா காமிகாஸே ட்ரோன்களையும், இத்தாலியின் நடுத்தர வகை ஃபால்கோ ட்ரோன்களையும் பயன்படுத்துகிறது.
அடுத்து என்ன ?

பட மூலாதாரம், Getty Images
இரு நாடுகளின் ராணுவங்களும் 2025 ஆம் ஆண்டு மோதலை ஒரு கற்றல் வாய்ப்பாகப் பார்க்கின்றன, அதற்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன.
இந்திய ராணுவம், "ஒவ்வொரு வீரரின் கையிலும் ஒரு கழுகு" என்று அதிகாரிகள் அழைக்கும் இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது. இது முன்னணி வீரர்களுக்கு எதிரி நாட்டு ட்ரோன்களைப் பறக்கவிடவும், இயக்கவும் மற்றும் அவற்றிலிருந்து பாதுகாக்கவும் கூடிய திறனை வழங்குகிறது.
இதனுடன் சேர்த்து, ஒவ்வொரு படைப்பிரிவிலும் ட்ரோன் போர்முறை நிபுணர்களைச் சேர்க்கும் திட்டமும் உள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்பு நிபுணர் சையத் முகமது அலியின் கூற்றுப்படி, பாகிஸ்தான் தனது ராணுவத் திட்டமிடல் மற்றும் பயிற்சியில் ட்ரோன் போர்முறையை ஒரு முக்கியப் பகுதியாக மாற்றியுள்ளது. இதில் ட்ரோன் தயாரிப்பு, கொள்முதல், பராமரிப்பு, பயன்பாடு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
டிஆர்டிஓ-வின் முன்னாள் தலைவர் முனைவர் ரெட்டியின் கூற்றுப்படி, இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை ஏஐ மூலம் இயங்கும் ஸ்வார்ம் ட்ரோன்கள் மற்றும் மின்னணு போர்முறை பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதாக இருக்கும்.
இது தவிர, உற்பத்தித் திறனை அதிகரிப்பது, தற்போதுள்ள ராணுவத் தளங்களுடன் ட்ரோன் அமைப்புகளைச் சிறப்பாக ஒருங்கிணைப்பது மற்றும் இந்த குறிப்பிட்ட பகுதிகளில் திறமையான மனித வளத்தை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது.
ஆனால், ட்ரோன்களை வியூக வலிமையை மாற்றும் ஒரு கருவியாகக் கருதக்கூடாது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
"ட்ரோன்கள் கண்காணிப்பு போன்ற மனித திறன்களை மேம்படுத்துகின்றன. இருப்பினும், இரு தரப்பிலும் உள்ள அரசியல் தலைமை முயற்சி மேற்கொண்டால், அவை அமைதிக்குத் தடையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று எஸ்ஐபிஆர்ஐ (SIPRI) அமைப்பின் ஆயுதப் பரிமாற்றத் திட்ட இயக்குநரும் மூத்த ஆராய்ச்சியாளருமான மேத்யூ ஜார்ஜ் கூறினார்.
மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப திட்டத்தின் இயக்குனர் எமிலி ஹார்டிங் ஒரு கேள்வியை வெளிப்படையாக முன்வைத்தார்.
"இவை இரண்டும் அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகள்" என்று கூறிய அவர்,
"உண்மையான கேள்வி என்னவென்றால், ட்ரோன்கள் இரு தரப்புக்கும் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு தீர்வை வழங்குகின்றனவா, அல்லது அவை மோதலை மிகவும் ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்வதற்கான தொடக்கமா?" என்பது தான் என்றார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































