விக்ரம்-1: விண்ணில் பாய்ந்த இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டின் சிறப்பு அம்சங்கள்

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், அமரேந்திர யாரலகட்டா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல்-கிளாஸ் ராக்கெட்டான விக்ரம்-1, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விக்ரம்-1 ராக்கெட் சுமந்து சென்ற கருவிகளை சுமார் 450 கி.மீ. சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. இதன் மூலம், தனியார் ஆர்பிட்டல் ஏவுதிறன் கொண்ட உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நிறுவனம் விக்ரம்-எஸ் என்ற சப்-ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
முன்னதாக நாங்கள் 'விக்ரம்-எஸ்' ராக்கெட்டிற்கு 'மிஷன் சர்வம்' என்று பெயரிட்டிருந்தோம். இப்போது 'விக்ரம்-1' ஏவுதலுக்கு 'மிஷன் ஆகமன்' என்று பெயரிட்டுள்ளோம்" என ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், skyrootaerospace
விக்ரம்-1 ராக்கெட்டின் சிறப்பு அம்சங்கள்
விக்ரம்-1 ராக்கெட்டை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் முதன்முதலில் நவம்பர் 2025 இல் காட்சிப்படுத்தியது. இது இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான ராக்கெட் என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா பிபிசியிடம் தெரிவித்தார்.
"இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான விக்ரம் சாராபாயின் நினைவாக இந்த ராக்கெட்டிற்கு விக்ரம்-1 என்று பெயரிட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
பிபிசிக்கு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அளித்த தகவலின்படி, விக்ரம்-1 ராக்கெட், செயற்கைக்கோள்களை 'புவியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கு' (Low Earth Orbit) கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது சிறிய அளவிலான செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
350 கிலோகிராம் பொருட்களை சுமந்து செல்லும்

பட மூலாதாரம், skyrootaerospace
"விக்ரம்-1 ராக்கெட் சுமந்து செல்லும் பொருட்களின் அதிகபட்ச எடை 500 கிலோகிராமாக இருக்கும், ஆனால் தற்போது நாங்கள் 350 கிலோகிராம் பொருட்களின் இதனை ஏவுகிறோம்" என பவன் குமார் சந்தனா பிபிசியிடம் கூறினார்.
இந்த ராக்கெட்டால் 350 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக்கோளை 'புவியின் தாழ்வான சுற்றுப்பாதையிலும்', 260 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக்கோளை 'சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையிலும்' (Sun Synchronous Orbit) கொண்டு செல்ல முடியும் என்று அவர் விளக்கினார்.
இந்த ராக்கெட்டால் செயற்கைக்கோள்களைப் பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளியில் 500 கிலோமீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
"இந்த ராக்கெட்டின் எடை 40 டன்கள் மற்றும் இது 20 மீட்டர் அதாவது தோராயமாக ஏழு மாடி கட்டடத்தின் உயரத்திற்குச் சமம். இது விநாடிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது" என பவன் குமார் சந்தனா கூறினார்.
இந்த ராக்கெட்டின் விட்டம் 1.7 மீட்டர் மற்றும் இதன் உந்துவிசை திறன் 1200 கிலோநியூட்டன் ஆகும் என்று ஸ்கைரூட் தெரிவித்துள்ளது. இதன் 3டி-பிரின்டட் திரவ என்ஜின் பாரம்பரிய என்ஜினை விட 50 சதவீதம் எடை குறைவானது.
இதன் சாலிட் ஃபியூயல் பூஸ்டர்கள் கார்பன் கலவை கட்டமைப்பால் (கார்பன் ஃபைபரால் செய்யப்பட்டவை) ஆனவை என்று நிறுவனம் கூறுகிறது.

பட மூலாதாரம், skyrootaerospace
ஆறு வகையான ஏவுபொருட்கள் (Payloads)
விக்ரம்-1 ராக்கெட் மூலம் ஆறு வகையான பொருட்கள் அனுப்பப்படும் என்று பவன் குமார் சந்தனா பிபிசியிடம் தெரிவித்தார்.
"இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐந்து பொருட்களையும், ஜெர்மன் நிறுவனமான டிடியுபிஇடி ஜிஎம்பிஹெச் (DQBED GmbH) தயாரித்த ஒரு பொருளையும் அனுப்புகிறோம்" என்று அவர் கூறினார்.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 2018 இல் இஸ்ரோவின் முன்னாள் பொறியாளர்களான பவன் குமார் சந்தனா மற்றும் நாகா பரத் டாகா ஆகியோரால் நிறுவப்பட்டது.
நவம்பர் 2025 இல், நிறுவனம் ஹைதராபாத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 'இன்ஃபினிட்டி கேம்பஸ்' என்ற பணிமனையை உருவாக்கியது.
ஸ்கைரூட் நிறுவனம் இந்த ஆண்டு மே மாதத்தில் விண்வெளி தொழில்நுட்பத் துறையில் யுனிகார்ன் அந்தஸ்தைப் பெற்ற இந்தியாவின் முதல் தனியார் நிறுவனமாக மாறியது.
2022-ல் 'சோதனை ராக்கெட்' ஏவப்பட்டது
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் நவம்பர் 18, 2022 அன்று விக்ரம்-எஸ் என்ற சப்-ஆர்பிட்டல் ராக்கெட்டை ஏவியது. இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தால் ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும்.
இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 88.8 கிலோமீட்டர் உயரத்தில் 'புவியின் தாழ்வான சுற்றுப்பாதையை' 301.4 வினாடிகளில் அடைந்தது.
"விக்ரம்-எஸ் ஒரு வகையில் சோதனை ராக்கெட் ஆகும். அதன் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றே ஆண்டுகளில் விக்ரம்-1 ஐ உருவாக்கினோம்" என பவன் குமார் சந்தனா பிபிசியிடம் தெரிவித்தார்.
விக்ரம்-எஸ் ராக்கெட் பிஏஇசட்ஓஓஎம்கியூ (BAZOOMQ) ஆர்மீனியா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மற்றும் என்-ஸ்பேஸ் டெக் இந்தியா என மொத்தம் மூன்று பொருட்களை சுமந்து சென்றது.

பட மூலாதாரம், skyrootaerospace
பிஎஸ்எல்வி - ஜிஎஸ்எல்வி என்ன வேறுபாடு?
தற்போது இஸ்ரோ மூன்று வகையான ஏவுகணை வாகனங்கள் அல்லது ராக்கெட்டுகளைப் பயன்படுத்திச் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது.
அவை:
- போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள் (PSLV)
- ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெயிக்கிள் (GSLV)
- ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெயிக்கிள் மார்க்-3 (LVM3)
இதில் பிஎஸ்எல்வி 1750 கிலோகிராம் எடையை சுமந்துகொண்டு 600 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு துருவ சுற்றுப்பாதையை அடைய முடியும்.
ஜிஎஸ்எல்வி என்பது சில அதிகனமான செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் ஒரு ராக்கெட்டாகும். இஸ்ரோ வழக்கமாக தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை (INSAT) ஏவுவதற்கு இந்த ராக்கெட்டை பயன்படுத்துகிறது.
இது புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் (GTO) சுமார் 2,250 கிலோகிராம் பொருளையும், புவியின் தாழ்வான சுற்றுப்பாதையில் சுமார் 6,000 கிலோகிராம் பொருளையும் கொண்டு செல்ல முடியும் என்று இஸ்ரோ கூறுகிறது.
அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்ல இஸ்ரோ எல்விஎம்3 ஐப் பயன்படுத்துகிறது. இது நான்கு டன் எடையுள்ள செயற்கைக்கோளை ஜிடிஓ வரை கொண்டு செல்ல முடியும். இதனால், 8,000 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக்கோளைக் கூட புவியின் தாழ்வான சுற்றுப்பாதை வரை கொண்டு செல்ல முடியும் என்று இஸ்ரோ கூறுகிறது.
இஸ்ரோவின் மூன்று ராக்கெட்டுகளுடன் ஒப்பிடுகையில், விக்ரம்-1 மிகக் குறைந்த எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது சிறிய செயற்கைக்கோள்களை மட்டுமே சுமந்து செல்லும்.
2027 ஆம் ஆண்டில் விக்ரம்-2 ஏவப்படும்
விக்ரம்-1ஐத் தொடர்ந்து விக்ரம்-2 ஏவப்படும் என்று ஸ்கைரூட் அறிவித்துள்ளது. இது 2027 இல் ஏவப்படும்.
இது சுமந்து செல்லும் பொருளின் அதிகபட்ச எடை புவியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கு 900 கிலோகிராம் மற்றும் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு 600 கிலோகிராமாக இருக்கும் என்று ஸ்கைரூட் நிறுவனம் அறிவித்துள்ளது.
விக்ரம்-1 ஐப் போலவே இதுவும் கார்பன் கலவை கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், மேம்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்படும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

பட மூலாதாரம், skyrootaerospace
விண்வெளி ஸ்டார்ட்அப்களின் தொடக்கம்
மத்திய அரசு 2023 இல் இந்திய விண்வெளிக் கொள்கையை வெளியிட்டது.
2015 முதல் 2024 வரையான காலகட்டத்தில் இஸ்ரோ 393 வெளிநாட்டு மற்றும் மூன்று உள்நாட்டு வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. இதன் மூலம் 439 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்துள்ளது.
மத்திய அரசு 2024 முதல் இந்திய விண்வெளித் துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் விண்வெளித் துறையில் 300-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மைய (Indian National Space Promotion and Authorization Centre) தரவுகளின்படி, செப்டம்பர் 30, 2025 வரை மையத்தில் 376 ஸ்டார்ட்அப்கள் விண்ணப்பித்திருந்தன.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022 இல் ஒரே ஒரு ஸ்டார்ட்அப் மட்டுமே இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 இல் உலகளாவிய விண்வெளித் தொழிலில் இந்தியாவின் பங்கு 2 சதவீதமாக (8.4 பில்லியன் அமெரிக்க டாலர்) இருந்தது.
இந்திய அரசின் கணிப்புப்படி, 2033 ஆம் ஆண்டிற்குள் இந்த தொகை 44 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























