மிக அதிக விலை எதிர்பார்க்கப்படும் டைனோசர் படிமம் - விஞ்ஞானிகளுக்கு என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Matthew Sherman
- எழுதியவர், எஸ்மே ஸ்டாலர்ட்
- பதவி, காலநிலை மற்றும் அறிவியல் துறை மூத்த செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
1997ஆம் ஆண்டில், சோதெபிஸ் ஏல நிறுவனம் நமது வரலாற்றுக்கு முந்தைய உலகின் அதிசயங்களை விற்பனை செய்வதற்கான ஓர் இயற்கை வரலாற்று ஏலத்தை நடத்தியது. இதில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டைனோசரும் சேர்க்கப்பட்டிருந்தது.
இது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான நிகழ்வாக இருந்தது; தங்கள் சேகரிப்புகளில் சேர்ப்பதற்காக மாதிரிகளைத் தேடும் உலகின் அருங்காட்சியகங்கள் இதில் பெரும்பாலும் கலந்துகொண்டன.
அங்கு ஏலத்திற்கு வந்த டைனோசர் 'சூ' என்று அழைக்கப்படும் ஒரு டைரனோசொரஸ் ரெக்ஸ் ஆகும்; இது இறுதியில் சிகாகோவில் உள்ள ஃபீல்ட் அருங்காட்சியகத்திற்கு 8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் செவ்வாய்க்கிழமை வருடாந்திர ஏலத்தில் மற்றொரு டி. ரெக்ஸ் காட்சிப்படுத்தப்பட உள்ளது; இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகவும் முழுமையான வடிவத்தைக் கொண்ட மாதிரிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த முறை டைனோசர்களைத் தேடுவது விஞ்ஞானிகள் மட்டுமல்ல, உலகின் பெரும் பணக்காரர்களும் தான்.
'கஸ்' என்று அழைக்கப்படும் இந்த புதிய மாதிரியின் விலை 30 மில்லியன் டாலர் என ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இது அதைவிட அதிக விலைக்கு விற்கப்படலாம், ஒருவேளை இதுவரை விற்கப்பட்டதிலேயே மிகவும் விலையுயர்ந்த டைனோசராகவும் இது மாறக்கூடும்.
இது இயற்கை வரலாற்று உலகில் விவாதங்களைத் தூண்டியுள்ளது. அதில் முக்கியமானது, இத்தகைய அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த மாதிரிகள் அருங்காட்சியகங்களுக்கும் அவற்றின் விஞ்ஞானிகளுக்கும் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டுமா? என்பதுதான்.
அல்லது, ஏலதாரர்கள் வாதிடுவது போல அறிவியலால் கைவிடப்பட்ட டைனோசர்களைக் கண்டறிந்து, அவற்றை இரண்டாவது அழிவிலிருந்து காப்பாற்றியதற்காக புதைபடிவ வேட்டைக்காரர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட வேண்டுமா?
சோதெபிஸ் ஏல நிறுவனத்தின் இயற்கை வரலாற்றுக்கான உலகளாவிய தலைவர் காசாண்ட்ரா ஹட்டன், இந்த உயிரினங்களைத் தேடி சில புதைபடிவ விஞ்ஞானிகள் (தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்) எவ்வளவு தூரம் செல்லத் துணிகிறார்கள் என்பதை நன்கு அறிவார்.
"அகழாய்வின் போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உயிரிழக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார். அவர்களில் பலருக்கும், பெருமைக்குரிய இறுதிப் பரிசு டைரனோசொரஸ் ரெக்ஸ் டைனோசர் தான்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த டைனோசரைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை; கிங் காங் மற்றும் ஜுராசிக் பார்க் போன்ற திரைப்படங்களில் தோன்றியதன் மூலமும், ஒரு ஆங்கில ராக் இசைக்குழுவின் பெயராகவும் இது நமது கலாசாரத்தில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Sotheby's
புதைபடிவங்களைத் தேடுபவர்கள் தங்களின் கூடாரங்கள் மற்றும் உணவுகளை முதுகுப்பைகளில் சுமந்துகொண்டு, பல மாதங்கள் களத்தில் செலவிடுகிறார்கள்; நச்சுப்பாம்புகள், பூச்சிகள் மற்றும் மலை சிங்கங்கள் வாழும் யாருமற்ற வெட்டவெளியின் நடுவே முகாம்களை அமைத்துத் தங்குகிறார்கள்" என்று அவர் விளக்குகிறார்.
தெற்கு டகோட்டா 'பேட்லண்ட்ஸ்' பகுதியில்தான், பூமியில் வாழ்ந்து மறைந்த 67 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு 'கஸ்' கண்டெடுக்கப்பட்டது.
ஆனால், அதைக் கண்டுபிடிப்பது என்பது ஆரம்பக்கட்ட வேலை மட்டும்தான்" என்று கடந்த 20 ஆண்டுகளாக புதைபடிவங்களைச் சேகரித்துப் பாதுகாத்து வரும் சுயாதீன தொல்லுயிரியலாளர் டாக்டர் ஃபியான் ஸ்மித்விக் விளக்குகிறார்.
"திடீரென்று அவை மண்ணிலிருந்து வெளியே எடுக்கப்படும்போது, அவற்றின் சுற்றுச்சூழல் சமநிலை மாறுகிறது; இதனால் அவை சிதையவோ அல்லது உடைந்து போகவோ தொடங்குகின்றன."
தாமஸ் ஹெய்ட்காம்ப் மற்றும் 'கஸ்'ஸைக் கண்டுபிடித்த குழுவினர், மிகவும் கவனமாக அகழாய்வு செய்து இந்த டைனோசரை கண்டுபிடித்தனர். டைனோசர் மண்ணில் புதைந்திருந்த நிலத்தின் உரிமையாளரும் கால்நடை வளர்ப்பாளருமான மறைந்த கேரி "கஸ்" லிக்கிங் என்பவரின் பெயர் டைனோசருக்கு சூட்டப்பட்டது.
"ஆனால், இது ஆண்டு முழுவதும் செய்யக்கூடிய வேலையல்ல" என்று கேஸாண்ட்ரா ஹாட்டன் விளக்குகிறார். "அகழாய்வுக்கு ஏற்ற பருவத்தில் மட்டுமே தோண்ட முடியும். நிலத்தடி பனி உருகும் வரை காத்திருக்க வேண்டும். பின்னர், நிலம் மீண்டும் உறைவதற்குள் மிக வேகமாகத் தோண்ட வேண்டும்."
கடந்த 2023 ஆம் ஆண்டில் அகழாய்வுப் பணிகள் முடிவடைந்த வேளையில், அக்குழுவினர் தங்களது மீட்புப் பணியின் முதற்கட்டத்தை மட்டுமே கடந்திருந்தனர். தொடர்ந்து, ஆய்வகச் சூழலில் அந்த டி-ரெக்ஸ் டைனோசரின் எலும்புக்கூட்டை ஆவணப்படுத்துவதிலும், அதனை மீண்டும் முழுமையான வடிவில் புனரமைப்பதிலும் மேலும் மூன்று ஆண்டுகள் கழிந்தன.

பட மூலாதாரம், Fiann Smithwick
செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் ஏலம், சம்பந்தப்பட்ட குழுவினருக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைக்கவிருக்கும் ஒரு பெரும் வருவாயாக அமையவுள்ளது; இதுவே இதுவரை நடந்தவற்றில் மிகப்பெரிய ஏலமாகவும் இருக்கக்கூடும்.
இவற்றுள் 'கஸ்' என்ற டைனோசர் புதைபடிவம், ஏலத்திற்கு முந்தைய மதிப்பீட்டில் 30 மில்லியன் டாலர் என்ற மிக உயர்ந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டைனோசர் ஏலத்தைப் பொறுத்தவரை, 'அபெக்ஸ்' என்ற ஸ்டெகோசொரஸ் படிமம் 2024-ல் சோத்பிஸ் நிறுவனத்தால் 44.6 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டதே தற்போதைய சாதனையாக உள்ளது; ஆனால், ஏலத்திற்கு முன் மதிப்பிடப்பட்ட விலையை விட இது 11 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்களின் ஆரம்ப ஏலத் தொகை 19 மில்லியன் டாலருக்கும் அதிகமாகவே இருக்கும். புதைபடிவங்களைக் கையாளும் உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய அருங்காட்சியகங்களால் கூட, இவ்வளவு பெரியத் தொகையைச் செலவிடுவது சாத்தியமற்றதாகவே உள்ளது.
"ஏற்கனவே நூற்றுக்கணக்கான புதைபடிவ படிமங்களை வாங்குவதற்கான விலையைக் கொடுக்க முடியாத நிலை உள்ளது" என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் டைனோசர் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் சுசன்னா மெய்ட்மென்ட் விளக்கமாக சொல்லுகிறார்.
ஏலத்தில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த ஐந்து டைனோசர்களும் 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு விற்கப்பட்டவை ஆகும். இதில் 2020-இல் 31.8 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட 'ஸ்டான்' என்ற டி. ரெக்ஸ் டைனோசரும் அடங்கும். இதன் ஆரம்ப விலை வெறும் 6 முதல் 8 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.
இது "உண்மையிலேயே ஒரு சிக்கலான விஷயம்" என்று அவர் கூறுகிறார்.
"உண்மையான புதைபடிவத்திற்கு மாற்று எதுவுமே இல்லை. நாம் ஏதேனும் ஓர் ஆய்வைச் செய்யப் போகிறோம் என்றால், அதன் உடலமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் முதன்மையான விஷயம். அதில் எது உண்மையானது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று பேராசிரியர் மெய்ட்மென்ட் விளக்குகிறார்.
பூமியின் கடந்தகால உயிரினங்களைப் பற்றிய படிப்பான 'பலியோபயாலஜி' (தொல்லுயிரியல்) இப்போது இருப்பதை விட வேறு எப்போதும் இவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.
"நாம் இப்போது அநேகமாக உயிரின அழிவு நிகழ்ந்துகொண்டிருக்கும் பேரழிவு காலகட்டத்தில் இருக்கிறோம்; நமது சுற்றுச்சூழலை மிகமிக வேகமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். தற்போதும் எதிர்காலத்திலும் என்ன நடக்கிறது என்பதை நமக்குத் தெரிவிக்கும் ஒரே வகையான அனுபவப்பூர்வமான தரவு கடந்த காலம் மட்டுமே" என்று அவர் கூறுகிறார்.
இது விஞ்ஞானிகள் மீதான தாக்கம் மட்டுமே. ஆனால் பொதுமக்களைப் பொறுத்தவரை, அருங்காட்சியகத்தில் டைனோசரின் உண்மையான எலும்புகளைப் பார்ப்பது "அவர்களை இயற்கை உலகத்துடன் ஒன்றிணைக்க உதவுகிறது" என்று பேராசிரியர் மெய்ட்மென்ட் கூறுகிறார்.
டைனோசர் புதைபடிவங்கள் இப்போது அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்கப்படுவதில்லை என்று கூறும் அவர், மாறாக அவை செல்வந்தர்களால் சேகரிக்கப்படும் "கலைப்பொருட்களைப் போல" கருதப்படுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்கிறார்.
'கடிபட்டதற்கான பெரிய தழும்பு மண்டையோட்டில் காணப்படுகிறது'

பட மூலாதாரம், Matthew Sherman
'கஸ்' என்றழைக்கப்படும் இந்த புதைபடிவத்தின் விலை, அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதிரி என்பதையே பிரதிபலிக்கிறது என்று கசாண்ட்ரா ஹாட்டன் சுட்டிக்காட்டுகிறார். "இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான 'டி. ரெக்ஸ்' படிவங்களில் 'கஸ்' ஒன்றாகும்; இதன் 61% எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக, ஒரு முழு எலும்புக்கூட்டில் பாதியைக் கண்டறிவதே ஒரு முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.
எலும்புகளின் நிலை, இந்த உயிரினம் வாழ்ந்த விதம் குறித்த ஆழமான தகவல்களையும் வழங்குகிறது.
"இதன் மண்டையோட்டின் மேற்பகுதியில் கடிபட்டதற்கான பெரிய தழும்பு ஒன்று உள்ளது; இது ஒரு சண்டையின்போது ஏற்பட்டிருக்கலாம். இதில் உடைந்த எலும்புகளும் உள்ளன; சில விலா எலும்புகள் உடைந்த இடங்கள் காலப்போக்கில் ஆறியபோது பெரிய திட்டுக்களாக மாறியிருப்பதைக் காண முடிகிறது."
ஏலத்தில் பங்கேற்குமாறு உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்களை பல மாதங்களாகத் தொடர்பு கொண்டு வருவதாக கசாண்ட்ரா ஹாட்டன் கூறுகிறார். "அறிவியல்பூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று பொது மக்களின் பார்வைக்குக் கிடைக்க வேண்டும்" என அவர் விரும்புகிறார்.
ஆனால் டைனோசர்களை மீட்டெடுப்பதில் உள்ள நேரம், திறன், செலவு மற்றும் அபாயங்களை இந்த விலை பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் கூறினார். "அகழாய்வில் ஈடுபடுபவர்களில் பலர் மிகவும் சிரமமான பொருளாதார நிலையில் வாழ்பவர்கள்; அவர்கள் செல்வந்தர்கள் அல்ல. அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தையே முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இவற்றைத் தோண்டி எடுப்பது செல்வந்தர்கள் அல்ல."
ஆனால், இவற்றை வாங்குவது என்னவோ கோடீஸ்வரர்கள் தான்.
'அபெக்ஸ்' என பெயரிடப்பட்ட ஸ்டெகோசரஸ் டைனோசரை, 'சிட்டாடல்' என்ற ஹெட்ஜ் ஃபண்டின் நிறுவனரும் சிஇஓ-வுமான கென்னத் கிரிஃபின் ஏலத்தில் வாங்கினார். அதை அவர், அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு கடனாக வழங்கினார்.
அருங்காட்சியகங்கள் தங்கள் அறிவியல் மற்றும் கலைத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு பணக்காரர்களையே நீண்ட காலமாக நம்பியிருக்கின்றன. கலைப்பொருட்களை வாங்கியவர்கள், அதை கடனாக வழங்குவது, உயில் எழுதி வைப்பது அல்லது நன்கொடையாக அளிப்பது போன்ற வழிகளில் அவற்றை அருங்காட்சியகங்களுக்குக் கொடுப்பதாக, புதைபடிவங்களை தொழில்முறையாக மீட்டெடுத்து விற்பனை செய்யும் டாக்டர் ஸ்மித்விக் கூறுகிறார்.
ஆனால் கலைப்பொருட்களைப் போலன்றி, புதைபடிவங்கள் குறித்த ஆய்வைப் பொறுத்தவரை, தனியாரிடம் உள்ள பொருட்களைச் சார்ந்திருப்பதில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. மிகவும் மதிக்கப்படும் அறிவியல் சஞ்சிகைகள், தனியார் சேகரிப்பில் உள்ள ஒரு மாதிரியின் அடிப்படையில் செய்யப்படும் எந்தவொரு ஆய்வையும் ஏற்றுக்கொள்வதில்லை.
பிற புதிய புதைபடிவ மாதிரிகள் வெளிவரும்போது, விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளைச் சரிபார்க்கவும், தங்களுக்குள் உடன்படவும் அல்லது மாறுபடவும், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்தப் புதைபடிவத்தை ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கும் என்பதே இதற்குக் காரணம்.
"அந்தப் புதைபடிவங்களை வைத்திருப்பவருக்கு அவற்றின் மீது சலிப்பு ஏற்பட்டாலோ, அவர் இறந்துவிட்டாலோ அல்லது விவாகரத்து பெற்றாலோ என்ன நடக்கும்? தனிநபர் சேகரிப்பில் இருந்த புதைபடிவங்கள் விரிவாக ஆராயப்பட்டு, பின்னர் அவை குப்பைத்தொட்டிக்குச் சென்ற பல கசப்பான உதாரணங்கள் இங்கு உண்டு," என்கிறார் லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மெய்ட்மென்ட்.
"அதனால் தான் சொல்கிறேன், அங்கே அறிவியல் என்ற ஒன்றுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது."
டைனோசர்களின் இரண்டாவது அழிவு

பட மூலாதாரம், Sotheby's
அருங்காட்சியகங்களிலும் கூட புதைபடிவ மாதிரிகளை இழப்பதற்கான அபாயம் உள்ளது என்று ஸ்மித்விக் கூறுகிறார்.
ஆரம்பகாலத்தில் புதைபடிவங்களை மிக அதிகமாகச் சேகரித்தவர்களில் மேரி அன்னிங் என்பவரும் ஒருவர். 1829 ஆம் ஆண்டில், அவர் முதன்முதலில் 'ஸ்குவாலோராஜா' என்ற புதைபடிவத்தைக் கண்டுபிடித்தார்; இது "சுருள் இரும்பு போன்ற கண்கள்" கொண்ட மீன் என்று அறியப்பட்டது. இது சுறாக்களுக்கும் திருக்கை மீன்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்த ஒரு பழங்கால உயிரினமாகும். அதன் உடல் பிரிஸ்டல் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது, ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போரின்போது நடந்த குண்டுவீச்சுத் தாக்குதலில் அது முற்றிலுமாக அழிந்துபோனது.
இருப்பினும், புதைபடிவங்களை தொழில்முறையாக தேடுபவர்களின் உழைப்பும் திறனும் இல்லாவிட்டால், புதைபடிவ மாதிரிகளோ அல்லது மிகக் குறைவான அறிவியல் கண்டுபிடிப்புகளோ கூட இருந்திருக்காது என்பதை புதைபடிவ சேகரிப்பாளர், அருங்காட்சியக விஞ்ஞானி, ஏலதாரர் என அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
"அவர்கள் டைனோசர்களை இரண்டாவது அழிவிலிருந்து காப்பாற்றுகிறார்கள்," என்கிறார் சோதேபிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த காஸாண்ட்ரா ஹாட்டன்.
இங்கிலாந்தின் ஜுராசிக் கடற்கரையில் புதைபடிவங்களைத் தேடும் தனது ஆய்வுப் பகுதியில், காலத்துடன் போட்டிபோட்டு புதைபடிவங்களைக் காப்பாற்றுவது எவ்வளவு கடினம் என்பதை நன்றாக அறிந்துக் கொண்டதாக ஸ்மித்விக் கூறுகிறார்.
"ஒரு மீனாக இருந்ததன் சரியான அச்சுப் பதிவைக் கொண்ட ஒரு பாறையை நான் ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் கண்டேன், ஆனால் இப்போது அது இல்லாமல் போய்விட்டது. ஒரு அலை வந்து அந்தப் பாறையைப் பிளப்பதையும், அடுத்த அலை வந்து அந்த மீனின் அடையாளத்தையே அழித்துவிடுவதையும் கற்பனை செய்து பாருங்கள்.
"கடல் அதை 10,000 துண்டுகளாக உடைத்துவிடுகிறது, அவ்வளவுதான். அது என்றென்றைக்குமாக அழிந்துவிடுகிறது."
சரியான நேரத்தில் மீட்டெடுக்கப்படும் புதைபடிவங்களில் பெரும்பாலானவை, சோதெபிஸ் போன்ற ஒரு ஏல நிறுவனத்திற்கு ஒருபோதும் செல்வதில்லை.
அவை அளவில் சிறியவை, கலாசார ரீதியாகக் குறைந்த மதிப்புடையவை, ஆனால் அருங்காட்சியகங்களுக்கும் பொதுமக்களுக்கும் அவை மிக அதிக மதிப்பைத் தரக்கூடும் என்று அவர் கூறுகிறார்.
"தொல்லுயிரியலின் ஒட்டுமொத்தப் பார்வையில் அறிவியல் ரீதியாக இன்னும் முக்கியமான எண்ணற்ற பிற புதைபடிவ மாதிரிகள் உள்ளன" என்கிறார் டாக்டர் ஸ்மித்விக். "மேலும், கடற்கரையில் குழந்தைகளுக்கு அம்மோனைட்டுகள் எனப்படும் பழங்கால கடல் உயிரின ஓடுகளை விற்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்; இது வெளி உலகில் ஆர்வத்தைத் தூண்டுகிறது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































