"தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்" - திருமாவளவன்

பட மூலாதாரம், Facebook/Thirumavalavan
தமிழ்நாட்டின் கடன் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து பதிலளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடும் திருமாவளவன், "ஏனெனில், கடனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலோடு ஒப்பிட்டே மதிப்பிட வேண்டும். கடனை மதிப்பிடுவதற்கான சரியான முறை, அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும்.தமிழ்நாட்டின் கடன் அளவு, 15-ஆவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளேயே உள்ளது. கடனின் முழுமையான அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும்." எனத் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை பற்றி குறிப்பிட்ட திருமாவளவன், "இன்றைய நிகழ்வில் 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சயளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்தப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும்." என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், "இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும்." என்றார்.
















